இக்காலத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
சமீபத்தில் சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும் சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. நேற்றைக்கு முன்தினம் இரவு படபிடிப்பு முடித்து தன்னுடைய காரில் பயணம் செய்த போது ஓட்டுநரின் உதவியுடன் திடீரென இரண்டு, மூன்று நபர்கள் பாவனா அவர்களை கடத்தி சென்று பலவந்த படுத்தியதாக செய்தி வந்தது. நேற்று காலையில் நாங்கள் ஊடகங்கள் மூலமாக செய்தி கிடைத்தவுடன் இது உண்மையானதாக இருக்க கூடாது என்று தான் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பின்பு உடனடியாக மலையாள நடிகர் சங்கம் ஈடவேல பாபு அவர்களை தொடர்புகொண்டு நாங்கள் கேள்விப்பட்டு அறிந்த இந்த விஷயம் உண்மைதானா என்று பதட்டத்துடன் கேட்டோம் அதற்கு அவர் உண்மைதான் என்று கூறினார். நேற்று இரவே போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று அதன் விசாரணை தொடங்கிவிடும் நாம் சிறிது நேரம் காத்திருப்போம் என்று கூறினார். நேற்று மாலை வரை அவர்களை தொடர்புகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை அறிந்து வந்தோம். பின்பு உடனடியாக கேரளா முதலமைச்சர் அவர்களுக்கும், காவல்துறைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுதிருந்தோம்.
நேற்று மதியம் 3 மணியளவில் பாவனாவிடம் சிறிய விசாரணை நடந்தது அந்த விசாரணையின் முடிவுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உறுதிபடுத்தபட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக மூன்று நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் மேலும் அந்த பெண்ணின்னுடைய ஓட்டுனர் கைது செய்யபடுவார்.
எங்களின் வேண்டுகோள் அந்த பெண்ணை கடத்தியது பணத்திற்காகவா அல்லது முன்விரோதம் காரணமாகவா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா ?? கைதானவர்கள் இந்த பின்னணியில் மட்டும்தான் உள்ளார்களா அல்லது வேறு யாரும் உள்ளார்களா என்றும் அப்படி வேறு யாராவது இருந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிக பெயரிய அளவில் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.
பின்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இன்று தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளது. மேலும் நாம் பயணம் செய்யும் போது நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நடிகர், நடிகைகள் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. டிரைவரின் உதவியுடன் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் முடியும்.
ஒரு பயணத்திற்கு நாம் காரை வாடகைக்கு வாங்கும் போது அந்த டிரைவரின் அனைத்து பின்னணியும் அறிந்து கொள்ளவேண்டும். பெரியவர்கள் இந்த பாதுகாப்பு சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட முடியும் ஆனால் அதே சமயத்தில் சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ?? சமீபத்தில் எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்க்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்ற செய்தி வந்தது நாம் எண்ணி பார்க்கவேண்டிய விஷயம் நாம் வெறும் 30% மட்டும் படிப்பறிவு கொண்டு இருந்த போது இருந்த பெண்களுக்கான பாதுகாப்பு இன்று 80% படிப்பறிவு கொண்டு இருக்கும் போது இல்லை என்று எண்ணும் போது வருத்தமாக உள்ளது. ஆனால் அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இளம்பெண்களும், இளைஞர்களும் இரவோடு இரவாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட இரண்டு வகையில் நம் சமுகம் செயல்படுகிறது. இதற்கு காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்,
சிதம்பரம் பிச்சாவரம் பாரஸ்ட் (Forest)
படபிடிப்பின் போது தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியது :
நேற்று கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே , நிஜமாகவே நடிகை பாவனாவின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் ஏனென்றால் இதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இதை பற்றி வெளியில் சொல்ல அனைவரும் கூச்சப்படும் ஒரு சமயத்தில் நடிகை பாவனா அவருக்கு நடந்த சம்பவத்தை வெளியில் வந்து சொல்லியிருக்கிறார். அவருடைய தைரியத்தை நான் வணங்குகிறேன். இதை போல் ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள். நாங்கள் ஏற்கனவே ஒரு கடிதத்தை நடிகர் சங்கம் சார்பில் கேரள முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். இன்று மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சார் கையெழுத்தோடு இன்று அனுப்பவுள்ளோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை மிக கொடூரமாக இருக்க வேண்டும், அப்போது தான் இனி அந்த ஒரு விஷயத்தில் இறங்க பயப்படுவார்கள், யோசிப்பார்கள். நாங்கள் கேரள நடிகர் சங்கமான “ அம்மா “வை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த விஷயத்தில் எங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளோம். இந்த விஷயத்தை பொறுத்தவரை உடனடியாக விரைந்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். இதை போல் ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது , என்னுடைய இதயம் வலிக்கிறது. நாங்கள் அனைவரும் இச்சமயத்தில் நடிகை பாவனாவுக்கு துணையாக இருக்கிறோம். இந்த செயலை செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். போலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேரள முதல் அமைச்சருக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். நேற்று எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்க்காரம் செய்து குப்பைதொட்டியில் தூக்கிபோட்டுள்ளார்கள் என்ற செய்தி வந்தது. பாலியல் பலாத்காரம், மற்றும் குழந்தைகளுக்க்கு நடக்கும் அநீதிகளை தடுப்பதற்கு நிச்சயம் ஏதாவது கடுமையான தண்டனை சட்டம் வரவேண்டும். நாங்கள் இப்போது இதை பற்றி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த நாங்களும் முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் மிகவும் கொடூரமானது என்றார் நடிகர் விஷால்.