
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமரா வரலாற்று ஆவண படங்களை வெளியிட்டார்.
உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.
ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.
தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார்.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைந்துள்ள உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும். புகைப்பட கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்படுகிறது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்பட உள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.
அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம் கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும் புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களான பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும் புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.
19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.
உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும். இ ந்த விழாவில் விஜிபி குழும தலைவர் சந்தோஷம் பேராசிரியர் இஸ்மாயில், பாவலர் அறிவுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கேமரா கலைஞனாக ஆசை – சிவகார்திகேயன்
கேமரா மியூசிய திறப்பு விழாவில் வரலாற்று ஆவண படங்களை வொளியிட்டு நடிகர் சிவகார்திகேயன் பேசியதாவது :
எனக்கும் கேமராக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இது வரைக்கும் இத்தனை விதமான கேமராக்களை நான் பார்த்தது இல்லை. ஶ்ரீதர் ஸார் என்னை அழைத்தப்போது இந்த மியூசியம் இந்த அளவுக்கு இருக்காது என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் உள்ளே நான் சென்றப்போது அவ்வளோ பெரிய கேமராவை பார்த்தது அதில் எப்படி செல்பி எடுப்பது என்றுதான் நினைத்தேன் ஏனென்றால் நம் மூளை அந்த அளவுக்குத்தான் யோசிக்கின்றது பி.சி.சாரும் ஶ்ரீதரும் அதைப் பற்றி எனக்கு சொன்னதும் நான் வியந்துப் போனேன் இப்போது எனக்கும் ஒரு கேமராவை வாங்கி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்துள்ளது என்று அவர் கூறினார்.