Friday, March 29
Shadow

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்க புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் மற்றும் சின்னத்திரை புகழ் ரக்ஷன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி அதில் சில தில்லாலங்கடி வேலை செய்து பணம் சம்பாதிப்பவர் சித்தார்த்(துல்கர் சல்மான்). அவரின் ரூம்மேட் மற்றும் நண்பர் காளிஸ்(ரக்ஷன்). சித்தார்த்துக்கு பியூட்டிஷியனான மீரா(ரித்து வர்மா) மீது காதல் ஏற்பட்டு ப்ரொபோஸ் செய்கிறார். மீராவும் சித்தார்த்தின் காதலை ஏற்கிறார். இந்நிலையில் காளிஸுக்கு மீராவின் தோழி ஸ்ரேயா(நிரஞ்சனி அகத்தியன்) மீது காதல் வருகிறது.

திருட்டுத்தனம் செய்து சம்பாதித்தது போதும் கோவாவுக்கு சென்று காதலிகளுடன் செட்டில் ஆகிவிடலாம் என்று சித்தார்த் மற்றும் காளிஸ் முடிவு செய்கிறார்கள். இதற்கிடையே சித்தார்த், காளிஸின் திருட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி பிரதாப் சக்ரவர்த்தி(கவுதம் மேனன்) அவர்களை பிடிக்க தீர்மானிக்கிறார்.

கோவாவுக்கு சென்ற பிறகு தான் சித்தார்த் மற்றும் காளிஸுக்கு தாங்கள் காதலிக்கும் பெண்களின் உண்மையான முகம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.

ரொமான்டிக் த்ரில்லர் படம் புதிது இல்லை என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் தேசிங் பெரியசாமி கைதட்டல் பெறுகிறார். சரியான அளவில் காதல், த்ரில், நகைச்சுவை ஆகியவற்றை கொடுத்துள்ளார் இயக்குநர்.

படத்திற்கு இசை பக்கபலம். படம் சுவாரஸ்யமாக இருப்பதால் அதன் நீளம் பெரிதாக தெரியவில்லை. துல்கர் சல்மானும், ரித்து வர்மாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கவுதம் மேனன் நடிப்பில் அசத்திவிட்டார். அவர் படங்களை இயக்குவதோடு மட்டும் இல்லாமல் அடிக்கடி நடிகர் அவதாரமும் எடுத்தால் நன்றாக இருக்கும்.

கதையின் நீளம் 2.42 மணி நேரம் என்றபோது, தொய்வில்லாமல் கதையின்கலம் பயணிப்பது ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சி. ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை, ஆனால் (Hi-Tech) ஹீரோயிசம் காட்டும் துல்கர் சல்மான் நடிப்பு இயல்பாய் வெளிப்படுத்துவது சிறப்பு. வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கும் ரக்ஷன், கதையின் இரண்டாம் நாயகன் என்றால் அது மிகையல்ல. அட்டகாசமக அதேசமயம் அமைதியாக நடித்திருக்கிறார் நடிகை ரிது வர்மா. அடுத்து யாரு நம்ம போலீஸ் சார் தான், படம் முழுக்க நிறைந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன் ஆரம்பம் முதல் இறுதி வரை இயல்பான நடிப்பு வெளிப்படுத்தினார், இடையில் கதைக்களம் சற்று சறுக்கினாலும் அதை உயர்த்திப்பிடிக்கிறார் GVM. கடைசியில் அந்த கிளைமாக்ஸ் கட்சியில் GVM ‘காதல் வயப்படுவது’ அல்டிமேட்.. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..’திருடா திருடா படத்தின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடலை போல அழகான படம்…’ இறுதியில் துல்கர் மற்றும் கௌதமின் காதல் கலந்த Hi-Tech கதையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..