Friday, March 29
Shadow

மாயவரம் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் துவக்க விழா மற்றும் ’காகங்கள்’ படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது

இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ’மாயவரம் பிக்சர்ஸ்’ என்கிற எங்களது பட தயாரிப்பு நிறுவனம் இன்று துவங்கப்பட்டது.

மாயவரம் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக ’காகங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை – திரைக்கதை- மற்றும் ஒளி ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், ராமு தங்கராஜின் கலை இயக்கத்தில், அந்தோணி பிஜே ரூபனின் ஒலி வடிவமைப்பில், டீனா ரொசாரியோவின் ஆடை வடிவமைப்பில் உருவாகும் இப்படத்தை ஆனந்த் அண்ணாமலை எழுதி, தயாரித்து, இயக்குகிறார்.

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளதாக படகுழுவினர் கூறியுள்ளனர்