Tuesday, April 16
Shadow

நான் பண்ணிய பிராடு இயக்குனர் மிஷ்கின் இசைவிழாவில் ருசிகரம்

வின்சென்ட் செல்வா இயக்கியுள்ள படம் விருமான்டியும் சிவனாண்டியும். புதுமுகம் சஞ்சய், அருந்ததிநாயர், தம்பிராமைய்யா, ஆடுகளம் முருகதாஸ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.மிட்சல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.

அப்போது மிஷ்கின் பேசும்போது,என்னை இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்த இரண்டாவது தாயாக வின் சென்ட் செல்வாவை என்றும் நான் போற்றிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் ஒரு பாடகராகதான் அறிமுகமானேன்.

அந்த வகையில், என்னை முதலில் பாட சொன்னார். நான் கொஞ்சம் இளையராஜா குரலில் பாடினேன். என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். ஆனால் 25 பேர் வரை கதை விவாதத்தில் உட்காருவார்கள்.

ஆனால் நான் ரொம்ப லாஜிக்காக பேசுவதால் என்னை அதில் சேர்த்துக்கொள்ள மாட்டார். ஸ்கிரிப்ட் ரைட்டிங் உனக்கு ஒத்து வராது என்பார். அதனால்தான் நான் ஸ்கிரிப்ட் ரைட்டராக ஆனேன் என்று நினைக்கிறேன்.

நான் ஓரளவு தெரிந்த டைரக்டராகியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வின்சென்ட் செல்வா எனக்கு கற்றுக்கொடுத்ததுதான். முந்தாநாள் இந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு வருவியா? என்று கேட்டார்.

அப்போதுதான் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. நீங்க கூப்பிட்டா நான் மறுப்பேனா என்று சொன் னேன். அவரிடம் யூத், ஜித்தன், ஒரு இந்தி படம் என 3 படங்களில் ஒர்க் பண்ணியிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு பத்து ஷாட் என்னை எடுக்க விட்டார். முதல் படத்திலேயே எனக்கு கோ-டைரக்டர் கார்டு போட்டார். என் வாழ்க்கையில் என் தாய் தந்தையைகூட மறந்திடுலாம். ஆனால் வின்சென்ட் செல்வா சாரை மறக்க முடியாது.

அவர் பேசிக்கா ஒரு கேமராமேன். தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவுக்கு அப்புறம் லென்ஸ்களைப்பற்றி அதிகமாக தெரிந்தவர் இவர்தான். எந்த லென்சை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள எனக்கு 4 படம் தேவைப்பட்டது.

அதை வின்சென்ட் செல்வா கற்றுக்கொடுத்தார். ரொம்ப சுதந்திரம் கொடுப்பார். யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலை எழுத வாலி சாரிடம் கொடுத்தோம். ஒரு லட்சம் கொடுத்தாயிற்று. சங்கர் மகாதேவன் பாடப் போகிறார்.

அப்போது நான் சார் கபிலன் என்று எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அந்த டியூனுக்கு அவரை எழுத சொல்வோம் என்றேன். அவர் எழுதினால் நன்றாக இருக்கும் என்றேன். எல்லோருமே சண்டை போட்டனர். ஆல்தோட்ட பூபதி என்ற வார்த்தை வந்தால் நல்லாயிருக்கும் என்றேன். யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

அப்போது நான் வாலி சார் பாட்டை எடுத்து விட்டு ஆல்தோட்ட பூபதி பாட்டை வைத்து ஒரு ப்ராடு பண்ணினேன். பாடலும் பாடியாகி விட்டது. அப்போது சார் வந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சி. என்னை பயங்கரமாக திட்டினார்கள்.

அப்போது மற்றவர்கள் திட்ட, வின்சென்ட் செல்வா சார் சூப்பரா இருக்குடா என்றார். அன்றைக்குத்தான் நான் டைரக்டர் ஆனேன். எனக்கு தமிழ் சினிமாவில் கெட்ட பெயருக்கு காரணம் பிடிவாதம்.

இந்த பிடிவாதம் எனது குருநாதர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தில் வந்தது. ஒரு குழந்தையும், ஒரு டைரக்டரும் எப்போதுமே பிடிவாதமாகத்தான் இருக்கனும். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கும்.

என் வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நான் வின்சென்ட் செல்வாவைத்தான் பார்க்கிறேன். அவர் பெரிய டைரக்டர். என்னவோ தெரியல அவர் நிறைய படங்கள் கிடைக்காமல் போராடிக்கிட்டே இருக்கிறார். ஒரு குழந்தையை பெறும்போது எவ்ளோ வலி இருக்கும்னு தெரியும். நான் உங்கள் பின்னாடி இருக்கிறேன். நான் சம்பாதிக்கிறதெல்லாம் உங்களுக்குத்தான் சார்.

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

வின்சென்ட் செல்வா பேசுகையில்,

இந்த விழாவுக்கு வந்திருக்கிற மிஷ்கினைப்பற்றி நிறைய சொல்லலாம். அவர் என்கூடவே இருந்திருந்தால் நான் இன்னும் நாலு ஹிட்டாவது கொடுத்திருப்பேன். இதை நான் எப்போதுமே சொல்வேன். எங்கிட்ட கேட்பார்கள். அவர் மட்டும் நல்ல படமா பண்றாரு. நீங்க என் இப்படி படம் பண்றீங்க என்பார்கள்.

நானும் மிஷ்கினிடம், இன்னும் ஒரு ரெண்டு படத்திற்காவது நீ என்கூட இருந்திருக்கலாமே என்பேன். ஒருசீனை எடிட் பண்ணி வைக்க சொன்னால் மியூசிக்கும் அதற்கு கம்போஸ் பண்ணி வைப்பார். ஜித்தன் படத்தில் பின்னணி இசை சிறப்பாக வந்ததற்கு அவர்தான் காரணம்.

இந்த படத்தின் கதையை முதலில் தம்பி ராமைய்யாவிடம்தான் சொன்னேன். கதையைக்கேட்டதும் வித்தியாசமாக இருக்கு என்றார். இந்த படத்தின் நாயகன் சஞ்சய், ஆடுகளம் முருகதாஸ் எல்லோரும் இந்த பையன் பெரிய ஆளாக வருவான் என்பார்கள். பயராக இருக்கான்டா என்பார்கள்.

எனக்கு அவனை பார்க்கும்போது குட்டி கார்த்தி மாதிரி இருக்கிறான். கார்த்தி கிடைக்கலேன்னா சஞ்சய்யை புக் பண்ணலாம். அதேமாதிரி வில்லன் அறிவழகன். மதுரையே கலக்குற வில்லன்னா ஒரு 50 வயசுக்கு மேல இருக்க வேண்டாமா.

சின்ன பையனை நடிக்க வைக்கிறீங்களே என்றார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்துல சார் நீங்க சொன்னது கரைக்ட்டா இருக்கு என்றனர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வில்லன் கிடைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவராஜ் ஒரு ஆடிட்டர். ஒரு ஆடிட்டிங் விசயமாக அவரை பார்க்க சென்றபோது இசையை பற்றி பேசினார். அப்போது ஒரு ஆர்மோனியத்தை பார்த்தேன். மியூசிக் தெரியுமா? என்றபோது, 15 வருசத் துக்கு முன்னாடி முயற்சி பண்ணினேன் சான்ஸ் கிடக்கல என்றார்.

1500 ராகங்கள் தெரிந்த ஒரே மியூசிக் டைரக்டர் இவர்தான். இந்த படத்திற்கு பிறகு எல்லா டைரக்டர்கள்கிட்டயும் நானே உங்களை கூட்டிட்டு போறேன் என்றேன். இந்த படத்தை கே.ஆர். பிலிம்ஸ் வாங்கியுள்ளனர்.

சின்ன படத்தை என்கரேஜ் பண்ணுவது பெரிய விசயம். இந்த படத்தில் ஒர்க் பண்ணிய அனைவருமே ப்ரண்ட்லியாக ஒர்க் பண்ணினார்கள். தம்பி ராமைய்யா சூப்பராக பண்ணினார். இந்த படம் உனக்கு பெரிய லைப்பை கொடுக்கும் என்றார். அவரது வார்த்தை சந்தோசத்தை கொடுத்தது.

Leave a Reply