Friday, March 28
Shadow

தண்டேல் – திரை விமர்சனம் (Rank 3.5/5)

தண்டேல் – திரை விமர்சனம்

காதலையும் தேசபக்தியையும் கலந்து கொடுத்திருக்கும் படம் தான் தண்டேல்
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்திருக்கும் தண்டேல் படத்தை அல்லு அரவிந்த் வழங்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி.

இதில் நாக சைதன்யா , சாய் பல்லவி , பிரகாஷ் பெலவாடி – , திவ்யா பிள்ளை , , கருணாகரன் ,’ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி ,கல்ப லதா, கல்யாணி நடராஜன் , மகேஷ் அச்சந்தா ,கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாகுலத்தைச் சேர்ந்த மீனவர் ராஜு (நாகா சைதன்யா) சத்யா (சாய் பல்லவி) இருவரும் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகி பின்னர் இளமை பருவத்தில் காதலிக்க தொடங்குகின்றனர். ராஜுவிற்கு மற்ற மீனவ குடும்பங்களைப் போல 9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என்று காலம் செல்கிறது. அந்த 3 மாதங்கள் ராஜுவும் சத்யாவும் அன்புடன், பாசத்துடன் தூய்மையோடு பழகுகிறார்கள். மீனவ நண்பர்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஆபத்தான சமயத்தில் காப்பாற்றுபவராகவும் விளங்கியதால் தந்தையைப் போல ராஜுவிற்கும் தண்டேல் (தலைவர்) என்ற பட்டத்தை மீனவ கிராமத்து மக்கள் வழங்க, அதன்பின் காதலர்களின் வாழ்க்கை பெரிய திருப்பத்தை சந்திக்கிறது. கடலுக்கு சென்று மரணமடையும் சில மீனவர்களை பார்த்த பின், சத்யாவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு ராஜுவின் மேல் உள்ள அக்கறையால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம், கிராமத்திலேயே தங்கி வேலை செய்யுமாறு சத்யா ராஜுவிடம் சத்யம் வாங்குகிறார். ஆனால் மீனவ குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜு சத்தியத்தை மீறி கடலுக்குச் செல்கிறார்.அதனால் கடும் கோபத்தில் இருக்கும் சத்யா ராஜுவை வெறுத்து, வேறொருவரை திருமணம் செய்து கொள்ள தந்தையிடம் ஏற்பாடு செய்ய சொல்கிறார். கருணாகரனுக்கு சத்யாவை மணமுடிக்க நிச்சயமாகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ராஜுவுடன் செல்லும் அனைவரும் புயலில் சிக்கி படகில் தத்தளிக்கும் போது தெரியாமல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் கடலோர படையால் கைது செய்யப்பட்டு கராச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜுவும் அவரது ஆட்களும் பாகிஸ்தான் சிறையில் என்ன துன்பங்களை அனுபவித்தார்கள்? அவர்களை காப்பாற்ற சத்யா என்ன செய்தார்? அனைவரையும் பாகிஸ்தானிலிருந்து மீட்க இந்திய வெளியுறவு துறை அமைச்சரை சந்திக்க முடிந்ததா? இறுதியில் 22 மீனவர்கள் இந்தியா திரும்பினரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

நாகா சைதன்யா காதல், பாசம், மீனவ நண்பர்களின் தலைவனாக, தன்னிகரற்ற நிலைபாட்டினையும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாகவும், நடன காட்சிகளில் உணர்வுபூர்வமாகவும் படம் முழுவதும் தனித்துவமான நடிப்பை வழங்குகிறார்.

சாய் பல்லவி வெளிப்படையான செயல்திறன் கதைக்கு ஆழத்தை சேர்த்து ராஜு மீதான அன்பையும் உணர்ச்சிகளையும் நம்பமுடியாத அளவிற்கு தத்ரூபமாக உணர வைக்கிறார். நாகா சைதன்யாவிற்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான பொருத்தம் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்து காதல் காட்சிகளிலும் சரி, நடன அசைவுகளிலும் சரி, போராட்டங்களிலும் சரி திறம்பட பிரகாசிக்கிறார்.

முக்கிய பங்களிப்பில் கருணாகரன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, மற்றும் கிஷோர் ராஜு வசிஷ்டா படத்தின் கதைக்கேற்ப பலம் சேர்க்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்புகள் படத்தில் வாழ்க்கையை சுவாசிக்கின்றன, முக்கிய தருணங்களை ஆன்மாவைத் தூண்டும் அளவிற்கு உயர்ந்து, பாடல்கள் நன்கு வடிவமைக்கப்பட்டு கதைகளின் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஷியாம் தத் மீனவர்களின் வாழ்வியலையும், காதலர்கள் சந்திக்கும் இடங்களையும், லைட் அவுஸ், கடலின் ஆபத்தையும், அதனால் ஏற்படும் இன்னல்களையும் கதையை மேம்படுத்தும் காட்சிக்கோணங்களால் செதுக்கியுள்ளார்.

ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக இந்த கதை களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். காதலையும் தேசபக்தியும் சரியான அளவில் கலந்து மிக ஒரு அற்புதமான படமாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது ஆனால் இப்படி ஒரு காதல் இதுவரை நாம் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல இந்தியா பாகிஸ்தான் கருத்து வேறுபாடு படங்களும் நிறைய வந்துள்ளன 22 மீனவர்களின் போராட்டத்தை மிக அழகாக கூறியிருக்கிறார். இயக்குனர் அதற்காக அவருக்கு சபாஷ் போட வேண்டும்.

மொத்தத்தில் தண்டேல் தலைவன்