
இவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நகைச்சுவை செல்வர், கலைமாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
80களிலும், 90களின் துவக்கத்திலும், இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில், ஏராளமான படங்களில் நடித்தவர். நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் மாப்பிள்ளை, உழைப்பாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாட்டி சொல்லை தட்டாதே, தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், கதாநாயகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. ஒருமுறை சொல்லி விடு, எங்கள் குரல் ஆகிய படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்” என்ற நிகழ்ச்சியை டெல்லி கணேசுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
எஸ்.எஸ்.சந்திரன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து 2001 முதல் 2007 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கட்சி கூட்டங்களில் உரையாற்றி வந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தபோது, 2010 அக்டோபர் 9 அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜம் என்ற மனைவியும் ரோஹித், ரங்கராஜ் என்ற மகன்களும் கண்மணி என்ற மகளும் உள்ளனர்.
