Tuesday, April 21
Shadow

நடிகை டிஸ்கோ சாந்தி அப்பா நடிகர் ரஞ்சன் மறைந்த தினம்

இராமநாராயண வெங்கடரமண சர்மா, இந்தியத் திரைப்படவுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர்.

ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது. 1941 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விடயம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிருங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக வசுந்தராதேவியும் (இவர் வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்தனர். ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் ரஞ்சன் சிவபெருமானாக சிவதாண்டவம் ஆடி இருந்தது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பக்தநாரதர் (1942) என்ற படத்தில் ரஞ்சன் நடித்தார்.

ரஞ்சனின் முதல் வெற்றிப் படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். வசுந்தரா தேவி இவருடன் இணைந்து நடித்திருந்தார்.

ரஞ்சனின் திரைப்பட வரலாற்றில் 1948 இல் வெளிவந்த சந்திரலேகா ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனைவிட வில்லனாக நடித்திருந்த ரஞ்சனே ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். இது வசூலிலும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. “நிஷான்” என்ற பெயரில் இந்தியிலும் இப்படம் வெளிவந்தது. நல்லவனும், கெட்டவனுமாக தமிழில் எம். கே. ராதா நடித்த வேடங்களை இந்தியில் ரஞ்சன் நடித்திருந்தார். இதையடுத்து ரஞ்சன் அகில இந்தியப் புகழைப் பெற்றார். நிஷானின் வெற்றியைத் தொடர்ந்து எஸ். எஸ். வாசன் தனது அடுத்த படமான “மங்களா” என்ற திரைப்படத்திலும் ரஞ்சனையே நடிக்க வைத்தார். ரஞ்சனின் வாள்வீச்சு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து “ஷின் ஷினாகி பூப்லபூ”, “சிந்துபாத்” என்று பல இந்திப் படங்களிலும் நடித்தார்.

சந்திரலேகா என்ற மறக்க முடியாத பாத்திரத்தை அதே பெயர்கொண்ட படத்தில் நடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, டி. ஆர். ராஜகுமாரி, சந்திரலேகா என்ற பாத்திரத்தில் சாலிவாகனன் (1945) என்ற படத்தில் நடித்தார். படத்தின் நாயகன் சாலிவாகனனாக நடித்தார் ரஞ்சன். ஒரு காதல் பாடலில், பந்துவராளி, காம்போதி, கௌளை, சிம்மேந்திரமத்தியமம் என்று மாறிமாறி ரஞ்சனும் ராஜகுமாரியும் பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது.

என் மகள் 1954 இல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1957 இல் நீலமலைத் திருடன் படத்தில் சாகசக் கதாநாயகனாக நடித்தார். அஞ்சலி தேவி இவருடன் இணைந்து நடித்தார். சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (டி. எம். சௌந்தரராஜன் பாடல்) என்ற பாடலை குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.

1959 ஆம் ஆண்டில் மின்னல் வீரன், ராஜாமலைய சிம்மன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதே ஆண்டில் காப்டன் ரஞ்சன் என்ற படத்தில் ரஞ்சனாக நடித்தார். இது படுதோல்வியைச் சந்தித்தது. இதுவே அவர் நடித்த கடைசிப் படமாகும்.

ரஞ்சன் தாம் நடித்த பக்தநாரதர், சிஷ்ய சிருங்கர், சாலிவாகனன் போன்ற படங்களில் தனது சொந்தக் குரலிலேயே அருமையாக பாடியவர். மங்கம்மா சபதத்தில் இவர் பாடிய வண்ணப் புறாவே நீ யார்? உன்னை வளர்க்கும் அச்சீமாட்டி ஊரென்ன, பேரென்ன? என்ற புறாவை வைத்து மங்கம்மாவை நினைத்துப் பாடும் பாடலும் சலிவாகனனில், எவ்விதம் தவப்பயன் அடைந்தாள், எண்ணி ஏங்குவதே என்னுள்ளம் எனும் பாடலும் ரஞ்சனின் இசை, குரல் நயத்துக்கு எடுத்துக்காட்டு.

நடிகர் ரஞ்சனின் சகோதரர் வைத்தியநாதன் ஒரு அணு அறிவியல் மாணவர். பின்னர் இங்கிலாந்தில் மேற்கத்திய இசை பயின்றுவிட்டு, சந்திரலேகா படத்துக்கு பின்னணி இசைக் கோர்ப்பு செய்திருந்தார்.

திரைப்படத்திலிருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்றபின்னர் சென்னையிலிருந்து 1970களில் பின்னணிப் பாடகர் பி. பி. ஸ்ரீநிவாசுடன் இணைந்து மாமியோ மாமி எனும் இசை, நகைச்சுவை நாடகமொன்றையும் மேடையேற்றினார்.

பிற்காலத்தில் ஒரு சில மராத்திப் படங்களை இயக்கியும் இருக்கிறார். இதன் பின்னர் ரஞ்சன் அமெரிக்காவில் நியூஜெர்சி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்த அவர் தம் 65வது வயதில் 1983 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியில் காலமானார்.