Sunday, April 19
Shadow

அனிருத் – விக்னேஷ்சிவன் கூட்டணியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிங்கிள் ட்ராக் விமர்சனம்

”ஒரு பட்டாம்பூச்சிய விட்டா பாருடா.. எட்டாத தூரத்துல…”  ”தானா சேர்ந்த கூட்டம்” படத்துக்காக அனிருத் இசையமைத்து வெளியாகியிருக்கும் பாடலின் ஆரம்பம் இது!

விக்னேஷ் சிவன் – அனிருத் காம்போ என்பது ‘நல்லிக்கறி – பன் பரோட்டா’ காம்போ போல.  ஒரு முறைக்கே சாப்பிட்டதற்க்கே வயிறு நிரம்பிவிட்டது. மறுபடியும் அதே கூட்டணி ‘ தானா’க கூடியிருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் “நானா தானா” பாடல் எப்படியிருக்கிறது?

னிருத் தன் கரியரின் முக்கியமான பகுதியில் நின்றுகொடிருக்கிறார். அவர் இசையமைப்பில் வந்த பெரும்பாலான படங்கள் ஹிட் தான். வருடத்திற்க்கு மூன்று படங்கள் நான்கு படங்கள் என்று அனைத்து ஆல்பங்களும் ஹிட்டத்துக்கொண்டிருந்த நிலையில், என்ன ஆனதோ தெரியவில்லை; கடந்த 2016ல் வெறும் இரண்டே படங்கள் தான் இசையமைத்தார். அதிலும் ஒன்று  ம்ஹும்…! ரெமோவிற்காக தன் உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த அனிருத் அதற்குப் பிறகு வெளியான ”ரம்” படத்திற்க்கு ஏனோ அத்தகைய உழைப்பைத் தர தவறிவிட்டார்.

மெதுவாக ரிதம் செட் செய்து பாடலுக்கு உள்ளே அழைத்துச்செல்வதற்குப் பதில், “ஒரு பட்டாம்பூச்சிய..விட்டா பாருடா” என தன் குரலில், டபாலென்று பாடலுக்குள் குதித்து நம்மையும் உடன் இழுக்கிறது ஆரம்ப நொடிகள். கிட்டாரின் பயன்பாடு செம்மையாக எனர்ஜியை தூண்டுகிறது.  அக்வஸ்ட்டிக் கிட்டார் பாடல் நெடுக பயணிக்கிறது, அதன் தம்பியான எலக்ட்ரிக் கிட்டார் வெளிப்படையாக இடையிலும் இறுதியில் மட்டும் வந்துபோகிறது.

அனிருதின்  எதிர்மறை வாத்தியங்களின் தொகுப்பு தான் பாடலின் ஹைலைட்.. அது என்னவென்றால் தபேலா மற்றும் ட்ரம்ஸ்! ஒரு கிராமிய ஃபோக் நடையில் இருக்கும் பாடலுக்கு நேட்டிவ் வாத்தியமான தபேலா மற்றும் புல்லாங்குழலை உபயோகித்து, அதே சமயம் பாடல் முழுவதிலும் ட்ரம்ஸையும் உபயோகித்திருப்பது சிம்ப்ளி க்ரேட் ப்ரோ!.

”அடியே.. அழகே” என்று ஹை பிட்ச் சமயத்தில் வருவது  வயலின் போலவே இருக்கும் சாரங்கி!  சாரங்கி, எடுப்பிலும் தொடுப்பிலும் அழகாக வந்து இசைந்து செல்கிறது.

இளையராஜாவின் “முத்துமணி மாலை” பாடலின் ஆரம்பத்தில் ’முத்துமணி மால’ முடிந்ததும் சின்ன  இடைவெளி விட்டிருப்பார். அங்கே அவரது பிற பாடல்கள் போல “தபேலா” தரிகிட தரிகிட என சின்ன குறும்புத் துண்டு போடும் என எதிர்ப்பார்த்திருப்போம்.  ஆனால் ராஜா அந்த இடைவெளியை அமைதியாகவே விட்டிருப்பார். அந்த மேஜிக்கை ‘உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட’விற்குப் பிறகும் நிகழ்த்தியிருப்பார். அது ஒரு வகையில் ரசிகள்களை குறும்பாக சீண்டுவது போன்ற விளையாட்டு.

அதோடு ஒப்பிட முடியாது என்றாலும்,  இந்த பாடலிலும் அதைப்போல ஓர் இடைவெளி இருக்கிறது. தபேலாவும் இல்லை, அமைதியும் இல்லை. இங்கு தான் அனிருத் டச். இடைவெளியில் “அஹெம் அஹெம்” என இருமியிருக்கிறார். பலர் இதை ட்ரோல் செய்யக்கூடும். ஆனால், அந்த  நொடியில் பாடல் கேட்பவரின் இதழ்களில் ஒரு சின்ன சிரிப்பு மலர்ந்தே தீரும்!

Leave a Reply