
மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் மோகன் ராஜா பேசும்போது, ‘எனக்கு எந்த பாராட்டு கிடைத்தாலும் அப்பா, அம்மாவுக்கு தான் சாரும். இந்த படத்துக்கு எந்த பாராட்டுக்கள் வந்தாலும் அது வேலைக்காரர்களுக்கு தான் போய் சேரும். உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசை தான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம்.
எங்கு போனாலும் 4,5 வருடம் ஆனாலும் பரவாயில்லை, தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி மீண்டும் ஒரு படம் பண்ண எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் தயாரிப்பாளர் ராஜா. அவர் கொடுத்த தைரியம் தான் இந்த வேலைக்காரன். நான் இயக்கிய நடிகர்களில் சிவகார்த்திகேயனுடன் வேலை செய்வது மிகவும் சௌகரியமாக இருந்தது. கூடிய விரைவில் இன்னுமொரு படத்திலும் இணைவோம்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுனு சொல்றாங்க. அரசியலுக்கு வர சினிமாகாரனுக்கு தான் எல்லா தகுதியும் உண்டு. மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள் தான் என்றார் இயக்குனர் மோகன் ராஜா.
