Wednesday, November 5
Shadow

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடிகனகாவே பிறக்க ஆசைப்படும் சீயான் விக்ரம்

 

ஒரு விஷயம் தெரியுமா? விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 34 வருடங்களைக் கடந்து புட்டார்.. அவரோட மகனே ஹீரோவா தலைகாட்ட ஆரம் பிச்ச நிலையிலும் இன்னும் இந்த விக்ரமும் கோலிவுட் ரேசில் ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது பலருக்கு பிரமிப்பா இருக்கும். அதிலும் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய்- அஜித், தனுஷ் – சிம்பு, விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்ற வரிசையில் விக்ரமுக்குப் போட்டி யார்? என்ற கேள்விக்கு இன்னிவரைக்கும் பதில் கிடைக்கலை என்பதுதான் இந்த சீயான் வெற்றியின் ரகசியம் .

மதங்கள் அல்ல மனிதர்களே சிறந்தவர்கள் என கூறும் குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகர் சியான் விக்ரம். ஆம் தாய் ஹிந்து, தந்தை கிறிஸ்தவம். காதலித்து இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்தவர் தான் விக்ரமின் தந்தை. இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை ஆனால் சினிமாவில் நல்ல கதாபாத்திரம் இவருக்கு கிடைக்கவில்லை, துணை நடிகர், சீரியல்கள் என நடித்தார் தந்தை. விக்ரமின் தாயார் சப் கலக்டர். ஆனால் விக்ரமின் குடும்பம் சினிமா குடும்பம் தான். விக்ரமின் அம்மாவின் சகோதரர் தான் இயக்குனர், நடிகர் தியாகராஜன். அதாவது விக்ரம் மற்றும் நடிகர் பிரசாத் இருவரும் மைத்துனர்கள்.

“நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில், ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது” – நடிகர் விக்ரம் தன்னைப் பற்றியும், தனது திரையுலகப் போராட்டம் பற்றியும் ஒரு விழாவில் பேசிய கருத்துகள் இவை.

ஆம்.. அவரே சொன்னது போல் விக்ரமிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கை, ஏமாற்றங்களோடு கூடிய ஏற்ற இறக்கங்களையே தொடர்ந்து கொடுத்து வந்தது. அப்பா, அம்மாவோட ஆசைப்படி எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கும்போதே 1984-ல் ‘என் காதல் என் கண்மணி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விக்ரம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு ஏற்பட்ட விபத்து, மூன்று ஆண்டுகள் இவரைப் படுத்த படுக்கையாக்கியது. இயற்கை உபாதைகளைக் கூட தன் வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் படுக்கையிலையே கழித்தவர் தன் முயற்சியைக் கைவிடாமல் மீண்டு வந்து அதே படத்தில் நடித்தார். ஆனால் படமோ படா தோல்வி, இப்படி ஆரம்பக்கால தோல்விகளுக்கு விக்ரம் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனாலும் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கத்தில் ‘தந்துவிட்டேன் என்னை’, பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் ‘மீரா’, எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ‘காவல் கீதம்’ ஆகிய படங்களில் நடித்தும் விக்ரம் என்ற நடிகனை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த விக்ரம் டப்பிங் கலைஞராகக் கூட தன்னை தகவமைத்துக்கொண்டார். ‘அமராவதி’ படத்தில் அஜித்துக்கும், ‘காதலன்’, ‘மின்சார கனவு’ படங்களில் பிரபுதேவாவுக்கும், ‘காதல் தேசம்’, ‘விஐபி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் அப்பாஸுக்கும் குரல் கொடுத்தவர் இதே சீயான் விக்ரம்தான். இப்படி தன் நாயகனாகும் கனவை சுமந்தபடி மற்ற ஹீரோக்களுக்கு குரல் கொடுத்து வந்த விக்ரம் எதிர்ப்பார்த்து சென்ற தெலுங்கு திரையுலக ரசிகர்களும் ஏமாற்றம் அளிக்கவே மீண்டும் தமிழுக்கு புது முயற்சியோடும் வெறியோடும் வந்தார்.

இந்த முறை தவறவிடக் கூடதென காத்திருந்து தனக்கான இயக்குநரை தேடிப்பிடித்தார் விக்ரம். அந்த இயக்குனரின் பெயர் தான் பாலா. விக்ரம் 9 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வரவேற்பும் ரசிகர்களின் ஆரவார அன்பும் 1999ல் பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படம் மூலமாகத்தான் கிட்டியது. ‘சேது’ கோலிவுட்டையே புரட்டிப்போட்டது. கல்லூரி இளைஞனாகவும், மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்திலும் விக்ரமின் அசாத்திய நடிப்பு பலரின் வாயை அடைத்தது. அந்த படத்தில் இருந்து தான் விக்ரமுக்கு ‘சியான்’ எனும் அடையாளம் கிடைத்தது. பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தை திரையிட ஆளில்லாமல் 6 மாதங்கள் இயக்குனர் பாலா தவித்தது தனிக்கதை. ஆனால் ‘சேது’வுக்குப் பிறகு “சீயான்” விக்ரமுக்கான வாய்ப்புகளில் வெளிச்சங்கள் பிறந்தன. கரத்தே யில் ப்ளக் பெல்ட், பெஸ்ட் நீச்சல் வீரர் என கலக்கிய விக்ரம் சினிமாவில் அதனை பயன்படுத்தினார். (கட்டிங் கண்ணையா)

‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’, ‘பிதாமகன்’ என்று விக்ரம் கமர்ஷியல் விஸ்வரூபம் எடுத்தார். தரணியின் ‘தில்’ கமர்ஷியல் ஹீரோவாவுக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்த ‘காசி’ படத்தை தமிழ் ரசிக குடும்பங்கள் கொண்டாடின. ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ படங்கள் அதிரடியான விக்ரமை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் வந்த வெட்டியான் சிந்தனாக பிதாமகனில் விக்ரம் நடித்தது மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. சூர்யா காமெடி கதாபாத்திரமாகவே மனதில் நிற்க, விக்ரம் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

விக்ரம் ஓடி வருவதும், கோபப்படுவதும், வெறி கொண்டு வில்லனைத் தாக்குவதும் என ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் இமை கொட்டாமல் பார்த்தனர். இந்தப் படம் விக்ரமுக்கு சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும் தேடிக்கொடுத்தது. விக்ரமின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், பார்வையாளர்களைத் திருப்திபடுத்துவதில் சியான் என்றுமே தவறியதில்லை. அதற்கு இவரின் மெனக்கெடல், வெவ்வேறு விதமான கெட் அப் போடுவது, எடையைக் கூட்டிக் குறைப்பது, பார்வையற்றவராக நடிப்பது என இவரின் பாத்திரங்கள் அனைத்திலும் இருக்கும் வித்தியாசங்களை சொல்லலாம்.

ஷங்கரின் ‘அந்நியன்’, ‘ஐ’ ஆகிய படங்களில் இவரின் உடலுழைப்பு மெச்சும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக அந்நியன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்றும் பலருக்கு ஃபேவரட் காட்சிதான், அதே போல நீண்ட நெடிய வசனங்கள் அனல் தெறிக்கும் பஞ்ச் என எதற்கும் இடம் கொடுக்காமல் ரசிகன் எதை எதிர்பார்த்தாலும் “அதுக்கும் மேல” ஐ படத்தில் ஒரு எக்ஸ்டார்டினரி பர்ஃபாமன்ஸ் கொடுத்திருப்பார் விக்ரம். ‘ஐ’ படத்தில் பாடி பில்டர், மாடல், கூனன் என்று உடலை சிதைத்து விக்ரம் நடித்த விதம் அர்ப்பணிப்பின் உச்சம் .