Sunday, June 21
Shadow

மெல்லிசை மன்னர்’களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி மறைந்த நாள்

1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி.கே. ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக்கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பல மேடை கச்சேரி களில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்

அன்றைய முன்னணி இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன். பின்னர் ஆர்.சுதர்சனம், டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராம மூர்த்தி, பின்னர் எம்.எஸ். விஸ்வ நாதனுடன் இணைந்தார்.

1950 மற்றும் 1960-களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர். 20 ஆண்டுகள் இணைந்திருந்த இந்த இரட்டையர்கள் 1965-ம் ஆண்டு பிரிந்தனர்.

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இருவரும் தனித் தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர். எம்.எஸ்.வி.யை விட்டு பிரிந்த பிறகு 19 படங்களுக்கு ராமமூர்த்தி தனியாக இசையமைத்தார். கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் இணைந்தனர். சத்யராஜ் நடித்த ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்துக்கு இசையமைத்தனர்.

2006-ம் ஆண்டு இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது சத்யபாமா பல்கலைக் கழகம்.

மேலும் ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்.எஸ். விஸ்வநாதன்- டி.கே. ராமமூர்த்தியை வெகுவாகப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தை கொடுத்து சொகுசு கார் மற்றும் தங்க காசுகளை பரிசாக அளித்தார்