Saturday, April 18
Shadow

நடிகை டி. பி. முத்துலட்சுமி மறைந்த தின பதிவு

டி. பி. முத்துலட்சுமி 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னைய பாண்டியர், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.

எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் “மகாபலி சக்கரவர்த்தி”, மின்மினி, தேவமனோகரி, பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.

1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்தன. 1951ல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.

முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர். நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார். முத்துலட்சுமி தனது 77வது வயதில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.