
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகிறது.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், சமந்தா, நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற மே 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்பதை விளக்கினார். “தனுஷுடன் நான் நடித்த ‘தொடரி’ படம் வெளியான பிறகு, என்னுடைய கேரக்டரை சிலர் மட்டுமே பாராட்டினார்கள்; பலர் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர். ஆனால், அந்தப் படத்தில் என்னுடைய திறமையைப் பார்த்து விட்டுத்தான் நாக் அஸ்வின் சாவித்ரியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்” என்று தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ்.
