
கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த விழாவில் அரசியல் குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு வந்த ரஜினி பேசுகையில், இமயமலைக்கு நான் செல்வதே கங்கையை பார்க்கத்தான்.
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைத்துவிடிவதுதான். இது முடிந்த பிறகு நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. நல்லவனாக இருக்கலாம் . ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்ககூடாது என்பதை கற்றுக் கொண்டேன்.
லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறினர். இதைத் தான் 40 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். என்னடா இந்த குதிரை ஓடிட்டே இருக்கே, 10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம், 40 வருஷம் பார்த்தாங்க இன்னும் நிக்காம ஓடுடேனு.
நானா ஓடுறேன், ரசிகர்களாகிய நீங்கள் ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான். யார் என்ன சொன்னாலும் சரி என் ரூட்ல நான் போய்டே இருப்பேன். ஊடகங்கள் எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்யறது கண்ணா இன்னும் நேரம் வரலை. நேரம் வந்துவிட்டால் மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்றார் ரஜினி.
