Monday, May 20
Shadow

ஆர்ஆர்ஆர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். இந்த திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனையில் ராஜமவுலியின் கிராபிக்ஸ் கண்களில் விரித்துக் காட்டும் திரைப்படம் RRR. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எடுத்துக்கொண்ட முயற்சி, இந்த திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத பிரம்மாண்ட திரைப்படமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறது.

ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் படத்தில் எடுத்துக்கொண்ட கருப்பொருளை, படம் முழுக்க நேர்த்தியுடன் கையாண்டுள்ளது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக அமைந்துள்ளது. குறிப்பாக நீரும் நெருப்பும் மோதிக்கொள்ளும் இடைவேளை சண்டைக்காட்சி இந்திய சினிமாவின் மைல்கல் காட்சியாக அமையும் வகையில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டி உள்ளது.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இடையே நட்பு வளரும் காட்சிகளும் நாட்டு குத்து பாடலும் தெலுங்கு படங்களுக்கே உரிய மசாலா. படத்தின் முதல் பாதி முழுவதும் ஜூனியர் என்டிஆர் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாம் பாதியில் ராம்சரண் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், இரண்டு தரப்பு ரசிகர்களையும் ராஜமௌலி சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார் என்றாலும், படத்தின் முடிவில் ராம் சரணுக்கே கூடுதல் ரசிகர் கூட்டம் உருவாகும் வகையில், திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தை தாண்டி இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு காட்சிக்கு காட்சி மயிர்க்கூச்செறியும் உணர்வு ஏற்படுவதால் படத்தின் நீளம் ஒரு பொருட்டாகவே அமையாதது ராஜமௌலியின் மேஜிக்.

அலியா பட் வாம்மா மின்னல் என தோன்றி மறைகிறார். பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி விட்டு அதனை கடந்து மற்றொரு திரைப்படத்தை எடுத்து விட முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முயற்சியாக அல்லாமல் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பாக RRR திரைப்படத்தை உருவாக்கி ரசிகர்களை குதுகலம் அடையச் செய்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி. ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் பங்களிப்பும், இசையமைப்பாளர் கீரவாணியின் உழைப்பும் காட்சிக்கு காட்சி படத்தை மெருகேற்ற பிரம்மாண்டத்தின் புதிய மைல்கல் என ஒட்டுமொத்தமாக மீண்டும் தன் முத்திரையை ராஜமவுலி வலுவாக பதித்துள்ளார்

படத்தின் பிளஸ்:

கிராபிக்ஸ், இசை

படத்தின் மைன்ஸ்:

சண்டைக்காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்பது ஒரு குறை

மொத்தத்தில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் பிரமாண்டத்தின் புதிய மைல்கல் என்றே சொல்லலாம்.