
தமிழ் சினிமாவில் நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் தான் கடந்த பல வருடங்களாக முன்னணி நாயகிகளின் வரிசையில் உள்ளார்கள். சமீப காலங்களில் அறிமுகமான நடிகைகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகிறார்கள்.
தெலுங்கிலிருந்து வந்த ராஷி கண்ணா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களில் நடித்து வளரும் நடிகைகளில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா, கார்த்தி ஜோடியாக நடிக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இந்த இரண்டு நடிகைகளும் அடுத்து விஜய் நடிக்க உள்ள படத்தில் நாயகிகளாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ‘மாநகரம், கைதி’ படங்களின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில்தான் விஜய் அடுத்து நடிக்க உள்ளார்.
அந்தப் படத்திற்காகத்தான் ராஷ்மிதா, ராஷி கண்ணா ஆகியோரிடம் பேசி வருகிறார்களாம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம். தமிழில் வந்த சீக்கிரத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தால் அது அதிர்ஷ்டம்தான்.

