
பொதுவாக நடிகர்கள் பட்டும் பாடமலும் தான் இருப்பார்கள் அதோடு மேடையில் அதிகம் பேசுவார்கள் ஆனால் அதை செயலில் காட்டமாட்டார்கள் அதில் மிகவும் வித்தியாசமானவர் என்றால் அது ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் என்று சொல்லாலாம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பொதுவில் சமூக விஷயங்களைப் பற்றிப் பேசுவதோடு, படத்திலும் சமூக நோக்கம் கொண்ட கருத்துகளைச் சொல்வார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘பேட்மேன்’ படம் இப்படியொரு விஷயத்தைப் பேசியது.
தற்போது ‘கேசரி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக மஹாராஷ்டிராவின் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்தில் இருக்கிறார். அந்தப் பகுதியில் பிம்போடு பட்ரக் எனும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அந்தக் கிராமத்தில் மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார் அக்ஷய். மேலும், படத்தின் ஷூட்டிங்கை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு கிராமத்து மக்களோடு இணைந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு களத்திலும் இறங்கி இருக்கிறார். கடும் வறட்சியால் அவதியுற்றிருந்த அந்தக் கிராமத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 10,000 மக்களும் அக்ஷய் குமாரின் இந்த உதவியால் மகிழ்ந்துபோயுள்ளனர். அதுபோக, அக்ஷய் பேசிய பேச்சு அவர்களை நெகிழச் செய்துள்ளது.
“உங்கள் கண்களில் நீர் வருவதைப் பார்க்க விரும்பவில்லை. குழாய்களில் நீர் வருவதைத்தான் பார்க்க விரும்புகிறேன்” எனக் கூறினாராம் அக்ஷய் குமார். அக்ஷய் சமீபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கையால் சமூக செல்வாக்கு பெற்ற நபர் என்பதற்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
