
இவர் சத்யதேவ் துபேய் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகிய சம காலத்திய நாடக எழுத்தாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இவர் பாலிவுட்டின் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் அத்தகைய கதாபாத்திரங்களின் அடையாளமாக விளங்கினார். சேகர் கபூரின் இந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா (1987) என்ற திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமான மொகாம்போ என்ற பெயரால் நினைவுகூரப்படுகிறார். மேற்கத்திய இரசிகர்களைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் திரைப்படமான இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டெம்பிள் ஆஃப் டூம் திரைப்படத்தில் நடித்த மோலா ராம் என்ற பாத்திரத்தின் பெயராலும் நினைவு கூறப்படுகிறார். பூரி மூன்று முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

அம்ரீஷ் பூர் 1967 ஆம் ஆண்டிற்கும் 2005 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்டின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவராவார்.
முதலில் நடிகராவதற்காக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெறவில்லை. பதிலாக அவர் இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழான தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை கிடைக்கப்பெற்றார். அதே நேரத்தில் பிரித்வி தியேட்டர் என்ற நாடகக்குழுவில் இணைந்து சத்யதேவ் துபேய் என்பவரால் எழுதப்பட்ட நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக, இவர் நன்கறியப்பட்ட மேடை நாடக நடிகராக ஆனதுடன் 1979 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி விருதினையும் வென்றார். இத்தகைய மேடை நாடக அனுபவமும், அங்கீகாரமும் அவரை முதலில் தொலைக்காட்சியிலும், இறுதியாக, திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தன எனலாம். இவரது மற்ற சகோதரர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் காலதாமதமாக, அதாவது 40 வயதில் தான் இவர் திரைத்துறையில் நுழைந்துள்ளார். பூரி பாலிவுட், கன்னடம், மராத்தி, ஹாலிவுட், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பிராந்திய மொழி திரைப்படங்களில் வெற்றிகரமாக பணி புரிந்திருந்தாலும், இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்தமைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.

1970 ஆம் ஆண்டுகள் வரை பூரி பெரும்பான்மையாக துணைக் கதாபாத்திரங்களில், அதிலும் வழக்கமான வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்து வந்தார். 1980 இல் வெளிவந்த ஹம் பாஞ்ச் என்ற வெற்றிப்படத்தில் முதன்மை வில்லனாக நடித்ததற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, அவர் முக்கியமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1982 ஆம் ஆண்டில் சுபாஷ் காயின் இயக்கத்தில் வெற்றித்திரைப்படமான விதாடா என்ற படத்தில் ஜாகவார் சௌத்ரி என்ற கதாபாத்திரத்திலும், அதே ஆண்டில் திலிப் குமார் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இரண்டு பெரும் நடிகர்கள் நடித்த சக்தி என்ற திரைப்படத்தில் ஜேகே என்ற முதன்மையான வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
வில்லனாக தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக இன்றும்நினைவு கூறப்படுபவை.
தமிழில் தளபதி, பாபா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
