
முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். படத்தில், அரசின் இலவச திட்டங்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை, வரலட்சுமியின் கேரக்டருக்கு பயன்படுத்தி, அவரை வில்லியாக சித்தரித்ததால், ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. பின்னர் அந்தக்காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் முருகதாஸ். இதில், நவ., 27 வரை முருகதாஸை கைது செய்ய கோர்ட் தடை விதித்து இருந்தது. இந்த வழக்கு இன்று(நவ., 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கில், அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனி வருங்காலங்களில் எடுக்கும் திரைப்படங்களில் அரசை விமர்சிக்க மாட்டேன் என பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வக்கில் கூறியதையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு(நவ., 28) ஒத்திவைக்கப்பட்டது
