
அறிமுக இயக்குனர் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த படம் மெல்லிசை. ‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ என்ற படநிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ரெடியாகி ஏறக்குறைய இரண்டு வருடங்களாகிவிட்டன. என்ன காரணத்தினாலோ மெல்லிசை படம் வெளிவராமல் முடங்கிக்கிடந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் பெயரை ‘புரியாத புதிர்’ என்று மாற்றம் செய்தனர். பெயர் மாற்றம் செய்த பிறகு பட வேலைகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது என்றும் புரியாத புதிர் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம்ஸ் சதீஷ்குமார் என்ற விநியோகஸ்தர் தமிழில் வெளியிட இருக்கிறார் என்றார்கள்.
இதற்கிடையில் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் புரியாத புதிர் படத்தை வெளியிட திட்டமிட்டனர். ‘புரியாத புதிர்’ படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ‘டி.வி.சினி கிரியேஷன்ஸ்’ பட நிறுவனம் வாங்கியது.
தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் ‘புரியாத புதிர்’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் தற்போது புரியாத புதிர் படத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. ஜே.எஸ்.கே.பிலிம்ஸ் சதீஷ்குமார் ஏற்கனவே வெளியிட்ட படங்கள் தொடர்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் அவருக்கும் பஞ்சாயத்து இருப்பதால் புரியாத புதிர் படம் வெளிவருவதில் சிக்கல் என்று தகவல் அடிபடுகிறது.
