
‘அரண்மனை 2’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுந்தர்.சி. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் 250 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பலரும் தயங்கினார்கள். இதனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகின.
தற்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள, இப்படத்தின் கலை இயக்குநராக சாபுசிரில் பணியாற்ற இருக்கிறார். கமலக்கண்ணன் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு செலவுகளில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரோடு இப்படத்தின் கதையில் பணியாற்றி வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக இருக்கிறது. நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்வதில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.