
சி. கே. சரஸ்வதி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
பெரும்பாலும் படங்களில் வில்லியாக கொடுமைக்கார மாமியாராக, அத்தையாக நடித்தாலும் சிறந்த குணசித்திர, நகைச்சுவை நடிகையும் கூட என்றும் சிலப்படங்களில் நிரூபித்துள்ளார்.
ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, படித்தால் மட்டும் போதுமா, உரிமைக்குரல், சின்னத்தம்பி, ரோஜா என சுமார் 500 படங்களுக்கும் மேல் நடித்தவர் சி.கே. சரஸ்வதி. நடிக்கும் அந்த பாத்திரமாகவே மாறும் வல்லமை படைத்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வடிவாம்பாளாக பத்மினியின் தாயாராக வருவார்.
பருத்த உடலமைப்பு. வசன உச்சரிப்பில் கணீரென்ற குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசும் பாங்கு இவருக்குக் கை வந்த கலை. வாணி ராணி படத்தில் முதற்பகுதியில் அமைதியான வாணிஸ்ரீயின் கொடுமைக்கார சித்தியாக வந்து ஆட்டிப்படைப்பார். பிற்பகுதியில் மற்றொரு ஆர்ப்பாட்டமான வாணிஸ்ரீயிடம் செம அடிவாங்குவார். லட்சுமி கல்யாணம் படத்தில் நிர்மலாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தடுக்க இவர் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது. பிற்காலத்தில் தனது தள்ளாத வயதில் தம் குடும்பத்தை தள்ளாடாமல் பார்த்துக்கொள்ள அவ்வபோது சிறிய வேடங்களில் தலைக்காட்டியவர், ரோஜா படத்தில் ஒரு பாடலுக்கும் ஆட்டம் போட்டார்.

பலப் படங்களில் வில்லியாக ஆட்டம் போட்டு பெண்களிடம் சாபங்களை வாங்கிய சி.கே.சரஸ்வதி அவர்களால் தன் குடும்பத்தினரிடம் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதித் தருவாயில் வறுமையில் வாடினார். தன்னுடன் நடித்த நெருங்கிய நட்பில் இருந்த நடிகைகளிடம் தம் குடும்ப கஷ்டத்தை சொல்லி அழுது பொருளுதவி பெரும் நிலைமைக்கு ஆளானார். அந்த வகையில் சமீபத்தில் மறைந்த ஆச்சி மனோரமா அவர்கள் பலமுறை சிகே.சரஸ்வதிக்கு உதவி இருக்கிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள்: என் மகன், நல்லவன், திகம்பர சாமியார், மருதநாட்டு இளவரசி, சுதர்ஸன், மாப்பிள்ளை, அழகி, இன்ஸ்பெக்டர், குமாஸ்தா, ரோஹிணி, லட்சுமி, மாமன் மகள், மேனகா, சதாரம், பாகப்பிரிவினை, மரகதம், எங்கள் செல்வி, பொன்னித் திருநாள், படித்தால் மட்டும் போதுமா , பாத காணிக்கை , நானும் ஒரு பெண்
