Sunday, April 19
Shadow

இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் மறைந்த தின பதிவு

கே. வி. மகாதேவன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, மோகனாங்க வதனி என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும்.

மதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார்.

கே. வி. மகாதேவன் 2001 ஜூன் 21 இல் தனது 83வது வயதில் சென்னையில் காலமானார்.