
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை.
எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பிக் பாஸ்’ ஆரவ், யோகிபாபு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
ஆனால், தான் ஹீரோயினாக நடிப்பதாக வெளியான செய்தியை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். நாளை (செப்டம்பர் 21) வெளியாக இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் புரமோஷனில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்தப் படம் குறித்து அறிந்து கொள்வதற்காக ஆரவ்வைத் தொடர்பு கொண்டேன். “நானும் அந்தச் செய்தியைப் பார்த்தேன். ஆனால், அது உண்மை கிடையாது. அந்தப் படம் தொடர்பாக இதுவரை யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் தற்போது ‘ராஜபீமா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும்” என்றார்.
