Tuesday, February 11
Shadow

பிரபல வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் வடிவேலு

சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. தன்னுடைய ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்தார் இயக்குநர் ஷங்கர். 2006 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.

10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’க்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இம்முறை, ஷங்கருடன் சேர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸும் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது.

ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், வடிவேலு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், படம் அப்படியே நிற்கிறது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். தென்னிந்திய நடிகர் சங்கமும் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு இரண்டு முறை கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார் வடிவேலு.

“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கடிதத்தில் கூறியுள்ளார் வடிவேலு