Sunday, June 21
Shadow

“தோல்வி அல்ல, அது ஒரு பாடம்!” – இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்த ஸ்ருதிஹாசன்

“தோல்வி அல்ல, அது ஒரு பாடம்!” – இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்த ஸ்ருதிஹாசன்

வெற்றி என்பது வெறும் கோப்பைகளாலும் பதக்கங்களாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை; கடினமான சூழ்நிலைகளை கடந்து தொடர்ந்து பயணிப்பதிலும் அதன் உண்மையான அர்த்தம் இருக்கிறது என்கிறார் நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் இரண்டாவது சீசன் போட்டியில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், தனது குரலால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இளம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான “சஞ்சாரி” பாடலை பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

நிகழ்வில் பேசிய அவர், வாழ்க்கையிலும் விளையாட்டிலும் சவால்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஒரு செயலை உண்மையாக நேசிக்கும் போது அந்த சவால்களே நம்மை வளர்க்கும் அனுபவங்களாக மாறிவிடுகின்றன என்று கூறினார். “கடினமான நாட்கள் நம்மை சோதிப்பதற்காக அல்ல; நம்மை உருவாக்குவதற்காகவே வருகின்றன. அதிலிருந்து கற்றுக்கொள்வதே முக்கியம்,” என்ற அவரது கருத்து பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்பது குறித்து அவர் தனிப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தியாவில் திறமைக்கு எந்தப் புவியியல் எல்லைகளும் இல்லை. நகரங்களிலும் கிராமங்களிலும் ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானது சரியான பயிற்சி, பொருளாதார ஆதரவு, அங்கீகாரம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் ஒரு குழு மட்டுமே என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இளம் வீரர்கள் தங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும், தேசிய அளவிலான மேடைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பளித்து வரும் ரக்பி பிரீமியர் லீக்கின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

விளையாட்டின் மூலம் தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் மதிப்பை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் இத்தகைய முயற்சிகள் மேலும் வளர வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

“It’s Not a Failure, It’s a Lesson!” – Shruti Haasan Inspires Young Athletes