Thursday, November 13
Shadow

‘எதை எங்கு பேசணுமோ அதை மட்டும் பேசலாம்..காப்பான் இசைவெளியீட்டு விழாவில் அசத்திய சூர்யா

இயக்குந்நர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, எந்த எதிர்பபர்ப்பும் இல்லாமல், வெற்றி தோல்வி எது வந்தாலும், தூய்மையான அன்பால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என தனது ரசிகர்களின் ஆரவாரத்திற்கு வணங்கி தனது பேச்சை தொடர்ந்தார்.

சூர்யா பேசுகையில், ‘எடுக்கும் முயற்சிகள் தவறலாம் ஆனால் விடாமுயற்சியை தவற விடக்கூடாது என்ற ஒன்றை எப்போதும் நினைத்துக் கொள்பவன் நான். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன் என நினைக்கிறேன். சமூக பணி செய்யலாம் விளம்பரத்திற்காக அல்லாமல் செய்யலாம். எதையும் நாம் விளம்பரத்திற்காக செய்ய வேண்டாம். அங்கு பேச வேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும். இல்லையென்றால் எதற்காக பேசினோமோ அதற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும்’ என சூர்யா தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

மேலும், திரைப்படம் குறித்து பேசிய சூர்யா, இப்படம் கிராமத்தில் இருந்து வெளிநாடுகள் வரை உள்ள அனைவருக்கும் போய் சேரும் சிந்திக்க வைக்கும், பொழுதுபோக்கு படமாக இருக்கும். கே.வி.ஆனந்த் சார் ரொம்ப முக்கியமானவர் எனது திரை பயணத்தில். அவரது, அயன் திரைப்படம் அடுத்தக்கட்டத்திற்கு என்னை உயர்த்தியது. காக்க காக்க படத்தில் முதன்முறையாக ஹாரிஸ் சாருடன் பணியாற்றினேன். ஷங்கர் சார் சொன்னது போல், கே.வி.ஆனந்த் சார் ராட்சசன், அசுரன் மாதிரி வேலை பார்ப்பார்.

இந்த படத்தில் ஆர்யா எதிரேலேயே சாயீஷாவிடம் காதல் சொல்வது போன்ற ரொமாண்டிக் சீன்கள் நடித்தது தான் மிகவும் கடினமாக இருந்தது. லால் சாருடன் பணியாற்றியது ஒரு அண்ணனுடன் இருந்தது போன்ற உணர்வை அளித்தது. சமுத்திரக்கனி, போமன் இரானி என பல ஸ்டார்களுக்கு இயக்குநர் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் என பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது என கூறினார். புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்பதாக கூறிய ரஜினிகாந்த், நான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள், ஆனால் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது’ என கூறினார்.

‘இந்த கல்வி கொள்கை பற்றி சாதாரணமாக சூர்யா பேசவில்லை, மாணவர்கள் படும் இன்னல்களை அருகில் இருந்து பார்த்ததால் அதனை பேசியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் உங்களது தொண்டு தேவை சூர்யா’ என்று வாழ்த்தி, காப்பான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை என்ற ரஜினிகாந்த், தான் நடித்து வரும் தர்பார் திரைப்படம் குறித்தும் பேசினார். ‘தர்பார்’ திரைப்படத்தில் இதுவரை இப்படி ஒரு ரஜினி படம் வந்திருக்கக் கூடாது என சொல்லி சொல்லி ராட்சசன் மாதிரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உழைத்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.