
பித்துக்குளி முருகதாஸ் பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்.
பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.
1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.
தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். 1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
