
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், அஸ்வந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இதை பார்த்த திருநங்கைகள் அப்செட் ஆகியுள்ளனர். மேலும் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தங்களை தவறாக காட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திருநங்கை பிரியா பாபு தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் ரசிகன் கைதட்ட வேண்டும், இதுவரை விஜய் சேதுபதி ஏற்றிராத கதாபாத்திரம் என அவருக்குத் திருநங்கை வேடம் அளித்தீர்கள். இதுதான் இந்தப் படத்தின் வியாபாரத்துக்கான படைப்பு. ஆனால், திருநங்கையர் குறித்த எந்தவிதமான புரிதலும் இன்றி அவர் ஆணாக (மாணிக்கம்) இருக்கும்போது திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, பின் திருநங்கையாக மாறுவார் என யார் உங்களுக்குச் சொன்னது? என்று குறிபிட்டுள்ளார்,
மேலும் அந்த பதிவில், குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கும் பாலியல் மாறுபாடுகள், வளரிளம் பருவத்தில் வெளிப்படுகையில், சமூகத்தின் அனைத்து கட்டுகளையும் உடைத்தெறிந்து, தான் உணர்ந்த பெண்மை உணர வேண்டி பெண் உரு கொண்டு, ஆண் அடையாளங்கள் துறந்து, ஆண்குறி அறுத்தெரிந்து பெண்ணாகிப் போகிறோம். ஆனால், நீங்கள் என்ன புரிதலோடு காட்சிப்படுத்தியுள்ளீர்கள்?. நடிகர் விஜய் சேதுபதி (ஷில்பா) தலை வழுக்கையாகக் காண்பித்து, அதில் விக் மாட்டுவதாகக் காட்சிப்படுத்துதலில் உள்ள வன்மம் ஏன்? திருநங்கையர் இன்று பல்துறைகளில் தங்கள் இருப்பை இருத்தி வருகின்றனர். 20 ரூபாய் நோட்டை யாசகம் கேட்டு வாங்கி, அதைப் பெருமையாக, சாதனையாகக் காட்சிப்படுத்தியதை எப்படி எடுத்துக் கொள்வது? என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒருமுறை வல்லுறவு செய்த காவல்துறை அதிகாரியை, ‘அவரு என் புருஷன்’ என ஷில்பா சொல்வது, தன்மீது ஏவப்படும் அத்தனையையும் துடைத்தெறிந்து, ரோஷம் அற்ற பிண்டங்களாக வாழ்பவர்கள் திருநங்கையர் என பொருத்தப் பார்க்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.