
மரியாதைக்கு முதல் இடம் என்றால் அது தமிழகம் என்றும் தமிழர்கள் என்றும் சொல்லுவார்கள் ஆனால் நம்ம தமிழ் சினிமாவில் ஒரு சிலர் அதிலும் குறிப்பாக தமிழ் கலைஞர்கள் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் நடந்துள்ளனர். யார் எதுக்கு என்று தானே ஆச்சிரியமாக பார்க்கிறீர்கள் ?
தமிழ் சினிமாவில் முன்னோடியாக இருந்த ஒரு இயக்குனர் மகேந்திரன். அவரது இயக்கத்தில் உருவான படைப்புக்கள் இப்போதும் ரசிகர்களாலும், திரையுலகத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அவருடைய மறைவுக்கு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை. இது என்ன மாதிரியான மனோபாவம் என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.
மகேந்திரன் இயக்கிய படங்களில் இளையராஜாவின் இசையும், எந்த இடத்தில் எப்படி இசை இருக்க வேண்டும் என்பதும் அவர்களது படங்களைப் பார்த்து இன்றைய இசையமைப்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அவர்களது படங்களெல்லாம் பாடங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.
தன் படங்களில் இசைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த ஒரு இயக்குனரின் மறைவுக்கு வளரும் இசையமைப்பாளர்களான சாம் சிஎஸ், ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் இரங்கல் செய்திகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டார்கள்.
ஆனால், டுவிட்டரில் அடிக்கடி பதிவிடும் முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், இமான் ஆகியோர் ஒரு வரி இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. அதிலும் இமான் நேற்று காலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் யு டியூபில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது எனக் குறிப்பிட்டு ஒரு கொண்டாட்ட மனோபாவத்துடன் அந்த டுவிட்டைப் பதிவிட்டார்.
தமிழ்த் திரையுலகின் ஒரு சீனியர் இயக்குநரின் மறைவு நடந்த சில மணி நேரங்களுக்குள் இப்படி ஒரு டுவிட்டைப் பதிவிடக் கூடாது என்ற இங்கிதம் கூடவா இவர்களுக்குத் தெரியாது…?.
