
திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று காணாமல் போனார். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாயமான அந்த பெண் விவகாரத்தில் நடிகை பூனை கண் புவனேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளவர் அதில், “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அவரை மீட்டுத் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதோடு, நடிகை புவனேஸ்வரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து புவனேஸ்வரிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வரும் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
