
இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை ராதாவின் உண்மையான பெயர் சந்திரிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து “ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்” என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.
இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
