
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட மக்கள் செல்வி என்ற பட்டத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி. தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் மட்டுமில்லாமல் குணச்சித்திர மற்றும் வில்லி கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் மூலம் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். அதோடு, இந்தப் பட்டம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது. அதோடு, தமிழ் சினிமாவில் ஒரேயொரு மக்கள் செல்வி தான். அதுவும், அது எங்கள் கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளனர். மேலும், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ்க்கு அப்போது மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட மக்கள் செல்வி என்ற பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், வரு மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தப் பட்டம் வழங்கப்பட்டதால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை நயன் தாராவுக்கு தான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து, கீர்த்தி சுரேஷ்க்கு மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்தப் பட்டத்தை அடைமொழியாகக் கொண்டு நேற்று வரு நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
