
இவர் இந்தித் திரைப்பட நடிகை மற்றும் அரசியலாளர் ஆவார். சிறந்த நடிகை எனப் பாராட்டப்பட்டு 8 பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் பிலிம்பேர் வாணாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1992 இல் பத்மசிறீ விருது பெற்றார். இவர் இந்தியாவில், மத்திய பிரதேசத்தில் உள்ள சபல்பூரில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். போபாலில் தூய சூசையப்பர் கான்வென்ட்
பள்ளியில் படித்தார். தமது 15 ஆம் வயதில் சத்யஜித் ராய் இயக்கிய மகா நகர் என்னும் வங்கத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். 1966 இல் குடியரசு நாள் விழாவில் இவருக்குச் சிறந்த என்.சி.சி விருது வழங்கப்பட்டது.
உபகார், கோசிஸ், கோரா காகஸ், சஞ்சிர், அபிமான், சுப்கே சுப்கே, மிலி, சோலே ஆகிய திரைப்படங்கள் செய பச்சன் நடித்தவற்றில் பேர் பெற்றவை ஆகும். சிறந்த நடிகைக்கான 8 பிலிம்பேர் விருதுகள் பல இவருக்குக் கிடைத்தன. குழந்தைகள் திரைப்பட சொசைட்டியில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

1973 ஆம் ஆண்டில் சூன் மூன்றாம் தேதியில் செய பாதுரி பிரபலத் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதியருக்கு சுவேதா என்ற மகளும், அபிசேக் என்ற மகனும் இருக்கிறார்கள். மகள் சுவேதா தொழிலதிபர் நிகில் நந்தா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மகன் அபிசேக் பச்சனும் முன்னணி இந்தி நடிகராக விளங்கி வருகிறார். அபிசேக் பச்சன் உலக அழகியும் நடிகையுமான ஐசுவர்யா ராயைத் திருமணம் செய்து கொண்டார்.
சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2004 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவையில் உறுப்பினர் ஆனார். 2012 இல் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
