
தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஆச்சி மனோராமா. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, வில்லியாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக, தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். ஆயிரம் படங்கள் கண்ட ஆச்சி மனோரமாவின் முதல் நினைவு நாள் இன்று. அவரின் சில முதல் படிகள் இதோ…
தஞ்சை மாவட்டம் ராஜமன்னார்குடி தான் ஆச்சி அவதரித்த ஊர். சின்ன வயதிலேயே நிறைய கஷ்டப்பட்டவர்.
உள்ளூர் கோவில் திருவிழாவில் பாட ஆரம்பித்தார். பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார். பிறகு அவரே நடிக்க ஆரம்பித்தார். அக்கம் பக்கத்தில் பிரபலமானார். பள்ளத்தூர் பாப்பா என்று அழைக்கப்பட்டார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நடித்த முதல் நாடகம் மங்கம்மா சபதம்.
பின்னணி பாடிய முதல் நாடகம் அந்தமான் கதை. பெண்ணாக நடித்த ஆண் நடிகர்களுக்கு பாடினார்.
இரண்டாவது நாயகியாக நடித்த முதல் நாடகம் விதியின் விசித்திரம்.
ஹீரோயினாக நடித்த முதல் நாடகம் யார் மகன்?
நடித்த முதல் படம் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை.
மகளே உன் சமத்து படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து “தாத்தா தாத்தா கொடு… இந்த தள்ளாத வயதிலும் சடுகுடு” என்ற பாடல்தான் பாடிய முதல் திரைப்பட பாடல்.
அபலை அஞ்சுகம் படத்தில்தான் முதன்முதலாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார்.
பொம்மலாட்டம் படத்தில் “பாடிய வா வாத்யாரோ வூட்டாண்ட…” என்ற பாடல்தான் மெட்ராஸ் பாஷையில் பாடிய முதல் பாடல்.
5 தலைமுறை, 5 முதல்வர்களை கண்ட முதல் நடிகையும் மனோரமா.