ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.