‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு முன்பாக ‘கலகலப்பு 2’ படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி.
இதனால் ‘சங்கமித்ரா’ தாமதமாகும் என்று செய்திகள் உலா வந்தன. இதற்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். ‘கலகலப்பு 2’ மற்றும் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு குறித்து குஷ்பு கூறியிருப்பதாவது:
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ படத்தின் 2-ம் பாகம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும். அதில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். எனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘கலகலப்பு 2’ குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படக்குழுவினர் போக, மேலும் ஒரு நாயகன் நடிக்கவுள்ளார். அது குறித்த அறிவிப்பை நாளை தெரிவிக்கிறேன்.
படம் என்பது படப்பிடிப்பு மட்டுமே அல்ல என்று இயக்குநர் ஸ்பீல்பெர்க் தெரிவித்திருக்கிறார். 70% படம் என்பது முதற்கட்ட பணிகளே. அதற்குப் பிறகு தான் படப்பிடிப்பு உள்ளிட்டவை அடங்கும். ‘சங்கமித்ரா’ டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும்.