Monday, May 12
Shadow

கலைஞரின் அன்பின் பிணைப்பில் விஜயகாந்த்

வெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலேவையும் கலந்தடித்த பாணியில் ஒரே ‘கிக்’கில் பந்தாடிய அட்ரெனலின் ஆக்‌ஷன் ஹீரோ விஜயகாந்தை…

கபினி அணை, முல்லைப் பெரியாறு அணை போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்களையும் மீறி, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களிலும் தனக்கென ரசிகர்கள் மன்றத்தைப் பெற்றிருந்த புரட்சிக்கலைஞரை…

பத்திரிகைகளின் பேட்டி என்றால், யோசித்து யோசித்துப் பேசி புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயற்சிப்பதை விட மனதில் பட்டதை டென் தவுசண்ட் வாலா போல தெறிக்கவிட்ட தேமுதிக தலைவரை…

கலைஞரின் ’நிரந்தர ஒய்வு’ இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோவில் பார்த்த அனைவருக்கும் ஹை வோல்டேஜில் ஷாக், அடித்திருக்கும் என்பது நிச்சயம். ‘ பார்க்கவே கஷ்டமா இருக்கு …பாவம்’ என முணுமுணுக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த சூழ்நிலையிலும், கலைஞர் மறைவையொட்டி விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்ட அந்த வீடியோ, அவரை வைத்து சமூக வலைதளங்களில் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கும், மீம்ஸ் க்ரியேட்டர்களிடமும் கூட ஒரு பரிதாபத்தை உருவாக்கிவிட்டதை உணரமுடிந்தது.

நாலு அடியெடுத்து வைத்தாலே மூச்சு வாங்கும் உடல்நிலை பஞ்சாயத்துகள் இருந்தாலும், பப்ளிக் வந்துவிட்டால் விறுவிறுவென சிங்க நடையோ அல்லது சிங்கார நடையோ போட்டுவிட்டு, சுவற்றுக்குப் பின்பக்கமாக போய் அக்கடா என உட்காரும் ஹீரோக்கள் ஹீரோயின்கள் அதிகம். காரணம் நட்சத்திரங்களுக்கு இமேஜ் முக்கியம். ரெட்புல் எனர்ஜி டிரிங்குக்கு கூட இன்ஸ்பிரேஷன் நம்ம தலைவரோட எனர்ஜிதான் என ரசிகன் சிலாகிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் நட்சத்திரங்களே அல்ல என ரசிகர்களே முடிவு செய்துவிடுவார்கள்.

ரிட்டயர்ட் வயதைத் தாண்டியிருந்தாலும், நாற்காலி இனி கிடைக்குமா என சந்தேகமிருந்தாலும், கட்சிகாரர்களை விழிப்புடனேயே வைத்திருக்கும் நடைப்பயணம், போராட்டம், பரபரப்பான அறிக்கை என 24×7 பொலிடிக்கல் பொடிமாஸ் போடுவதில் மும்முரமாக இருந்தால்தான் அவர் ’வருங்கால தமிழகம்’. இல்லையென்றால் உடன்பிறப்பும் உடனடியாக ட்ராப் ஆகிவிடும்.. ரத்தமும் சுண்டிவிடும்.. தோழர்களும் நொந்து விடுவார்கள்..தம்பிகளும் பம்மிவிடுவார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், பரபரப்பான ஆக்‌ஷன் ஹீரோ, எதிர்பார்ப்பை கிளப்பிய அரசியல் தலைவர் என தமிழக அரசியலில் தனது இருப்பை அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் காட்டிய விஜயகாந்த், கலைஞருக்கு அஞ்சலி செலுத்த மெரீனாவுக்கு வந்தார்.

கால்கள் இடறுகின்றன. கேப்டன் என கம்பீரமாக வலம் வந்தவர் தடுமாறுகிறார். நான்கு அடிகள் நடந்ததுமே அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. கைகள் எங்கோ செல்கின்றன. மச்சான் அந்த கைகளை லாவகமாகப் பற்றி கொள்கிறார். மறுபக்கம், நிற்க தடுமாறும் தருணத்தில் சட்டென்று கணவரைப் பிடித்து தாங்குகிறார் மனைவி. அனல் தெறிக்க வசனம் பேசும் அவரால் அந்த தருணத்தில் பேசவே முடியவில்லை. ஆக்‌ஷனில் பாய்ந்து மிரட்டும் அவரால் நடக்கவே முடியவில்லை. தனது கர்ஜனையிலேயே எதையும் கட்டுப்படுத்தி பழக்கப்பட்ட, விஜயகாந்திற்கு அவரது உடல் உறுப்புகளே கட்டுப்பட மறுக்கின்றன.

கண்களைத் தவிர…

மெரீனாவின் அலையோசையின் பின்னணியில் ஒய்வெடுத்து கொண்டிருக்கும் கலைஞரின் ‘நிரந்தர ஓய்வு’ இடத்திற்கு அவர் வந்தபோது…

விஜயகாந்தின் மனதிற்குள் இருந்ததை, அப்படியே கண்ணீராய் காட்டிக்கொடுத்தன அந்த கண்கள்.

இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்ரமித்து இருப்பவை, ஆக்‌ஷனில் கலக்கிய விஜயகாந்த் எந்தவித ரியாக்‌ஷனும் காட்டமுடியாமல் தவித்த அந்த தருணங்கள்தான். விஜயகாந்த் ஒரு குழந்தையைப் போல நடந்து வந்ததது முதல் அனைத்தும் வீடியோ கேமராக்களில் முழுமையாக பதிவு செய்யப்பட்டன. அவரது மனைவியோ மச்சானோ தடுக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ஒருவேளை அவர்கள் அதை ஒரு செய்திக்கான வாய்ப்பாக எடுத்து கொண்டிருக்கலாம்.

ஆனால்…விஜயகாந்த் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களுக்கு, கேமராக்களின் சூட்சுமமும் அத்துபடி. என்ன கேமரா.. என்னென்ன லென்ஸ்கள், எந்த ரேஞ்சில் எப்படி ஃப்ரேமில் வரும் என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட அனுபவம் இருந்தும் தனது மச்சானின் கைகளைப் பிடித்து தடுமாறி நடந்து வந்ததை பற்றி அவர் கவலைப்படவில்லை. இப்படி பரிதாபமாக இருப்பவரால், இனி அரசியலில் தீவிரமாக ஈடுபடமுடியுமா? ஆட்சியைப் பிடிக்க முடியுமா? அப்படியே ஆட்சியைப் பிடித்தாலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியுமா? இவருக்கு ஒட்டு போட்டால் வெயிட்டா இல்லை வேஸ்ட்டா என்ற கூட்டிக்கழித்துப் பார்க்கும் மக்கள் மனதில் தனது எதிர்காலத்தைப் பற்றி பல கேள்விகள் எழும் என்பதை விஜயகாந்தும் அறிவார். தான் தடுமாறி நடப்பது, தனது அரசியல் வாழ்க்கையையே தள்ளாட வைக்கக்கூடும், தனது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதையும் அறிந்தவர்தான் விஜயகாந்த். ஆனாலும் கூட, அவர் எதையும் கண்டுக்கொள்ளவில்லை என்பதையே அவரது வருகை காட்டுகிறது.. தனது உடல்நிலையை மறைத்தோ, சிகிச்சைகளை காரணம் காட்டியோ இப்படி ஒரு பரிதாபமான நிலையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்திருக்கலாம்..ஆனால்.. கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நிமிடங்களில்… அந்த மெரீனாவில்… உண்மையிலேயே ஒரு கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் கன்னங்களில் வழிந்தோடிய அந்த கண்ணீரில் நடிப்பில்லை. நான் இப்படிதான் என உணர்த்திய உங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

தனது பாசத்திற்குரிய தம்பி விஜியைப் பார்த்து, கருணாநிதியின் ஆன்மா கூட கண்ணீர் வடித்திருக்கும். அந்த கண்ணீர் வீணாகாது.