
‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இவருடைய அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பதில் இப்போவே போட்டி நிலவுகிறது. அதில் இரு இயக்குநர்களின் பெயர்கள் அடிபடிகிறது. ஒருவர் விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா. மற்றொருவர் கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத். இவர்களில் ஒருவர் தான் விஜய்யை அடுத்து இயக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் விஜய்யை சந்தித்த மோகன்ராஜா ‘நீண்ட காலம் கழித்து நண்பர் விஜய்யை சந்தித்தேன். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். நிறைய பேசினோம். ‘வேலைக்காரன்’ படம் பற்றி அவர் பெருமைப்பட்டார். அது தான் எனது சிறந்த தருணங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய மோகன் ராஜாவிடம் ரசிகர்கள், ‘விஜய் படத்தை மீண்டும் இயக்குவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த மோகன்ராஜா, ‘காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார். இதிலிருந்து விஜய்யின் பதிலுக்காக மோகன் ராஜா காத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
