Monday, April 20
Shadow

பாடலாசிரியர் மருதகாசி பிறந்த தினம்

மருதகாசி தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.

1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

அதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.

தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.

இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

இவர் பாடல் இடம் பெற்ற படங்கள்

நீலமலைத் திருடன், ரத்தக்கண்ணீர், ரம்பையின் காதல், (ராஜா ராணி, தூக்குத் தூக்கி, ஆயிரம் ரூபாய் ஆட வந்த தெய்வம், பிள்ளைக்கனியமுது, விவசாயி, மல்லிகா, உத்தம புத்திரன், பாவை விளக்கு