
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த ‘நிமிர்’.
இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
உதயநிதி கிராமத்தில் ஒரு ‘நேஷ்னல்’ என்ற புகைப்பட ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தையாக வருகிறார் மஹேந்திரன். அவரும் மிகப்பெரிய புகைப்பட கலைஞர்தான். வாழ்க்கையில் ரசிக்கும், ரசனைக்கும் புகைப்படத்தை தன்னுடைய கேமராவில் எடுக்க துடிக்கும் ஒரு கலைஞன்.
பிரச்சனை ஒன்றில் சமுத்திரக்கனி உதயநிதியை ஊர் மக்கள் பலர் முன்னிலையில் அடித்து விட, சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை தான் செருப்பு அணிய மாட்டேன் என எடுக்கும் ஒரு சபதமே இந்த படத்தின் கதை.
சமுத்திரக்கனியை திருப்பி அடித்து செருப்பை அணிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. முதல் பாதியில் ஒரு காதலும், இரண்டாம் பாதியில் ஒரு காதலும் அருமையான பயணம்.
உதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க பல வழிகளில் முயன்று கொண்டுதான் இருக்கிறார். இதிலும் அந்த முயற்சி தானே நடந்திருக்கிறது. அனுபவ நடிப்பை மகேந்திரனும், எம் எஸ் பாஸ்கரனும் கொடுக்க தவறவில்லை.
எம் எஸ் பாஸ்கர் நடிப்பின் உச்சத்திற்கு சென்று விட்டார். தனது நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு வைக்கிறார். பார்வதி நாயர், நமீதா புரமோத் என இரண்டு நாயகிகள். இருவரில் நமீதா புரமோத் மனதில் நிற்கிறார், அம்புட்டு அழகு. வெறும் அழகு மட்டுமல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்கிறார் நமீதா. அந்த பெரிய விழிகளைக் கொண்டு அவர் பார்ப்பதெல்லாம்… நிச்சயம் இந்த ஆண்டின் கனவுக் கன்னியாக நமீதா புரமோத் ரசிகர்கள் மனதில் மையம் கொள்வார்.
கருணாகரன், கஞ்சாகருப்பு, சண்முகராஜன், கஞ்சா கருப்பு, ஆரோக்கிய தாஸ் அனைவரும் காமெடி கதாபாத்திரத்தில் ஆங்காங்கே வந்து கலகலப்பூட்டிச் செல்கின்றனர்.
சமுத்திரக்கனியின் வசனங்கள் படத்தில் மிகப்பெரிய பூஸ்ட். எளிமையான கதை என்றாலும் அதை எடுத்துச் சென்ற விதம் அப்ளாஷ்.
படத்தின் பெரிய பலம் இவர்தான், ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இவரின் ஒளிப்பதிவின் அருமை முதல் ஐந்து நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். அழகு சாரல், மாலைப் பொழுது, கிராமத்து சந்தை, அழகு பூஞ்சோலை என சாதாரண காட்சிகளையெல்லாம் மெருகேற்றி அழகூட்டிச் சென்றிருக்கிறார்.
தர்புகா சிவா 4 பாடல்களும், அஜ்னீஷ் லோக்நாத் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார்கள். நெஞ்சில் மாமழை ரிபீட் மோட்.
அனைத்தும் கூடியிருந்தும் கதையில் வலு இல்லாதது படத்திற்கு சற்று பின்னடைவு தான். அழகு காட்சிகளோடு கதையின் கருவையையும் சற்று அழகுபடுத்தியிருந்தால் இன்னும் சற்று நிமிர்ந்து நின்றிருக்கலாம்.
நிமிர் – அழகான காட்சியமைப்பு .Rank 3/5