Wednesday, April 30
Shadow

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: ரஜினி வேண்டுகோள்

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. பிறகு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன். மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு உறுதி கூறியபிறகு அதற்கு கெளரவம் கொடுத்து அவர்கள் கூறிய நாள்கள் வரை அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.

சில சமூக விரோதிகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புகும் முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

rajini-statement-about-jallikattu

Leave a Reply