
இன்று காலை மெரினாவில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் முயற்சித்தனர்.
அதனைத்தொடர்ந்து, பல ஆதரவாளர்கள் கடற்கரையிலிருந்து ஓடிப் போய் கடலை ஒட்டி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இச்சூழலில், சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல் சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில், அங்கு குழுமியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போலிசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். ஆனால், போலிசாரின் பேச்சுவார்த்தைக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வந்தனர்.
தமிழ்த் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதரவாளர்களை நேரில் சந்தித்து இதனை கைவிடும்படி கோரிக்கை விடுத்தார்.
மேலும், இது கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்று குறிப்பிட்ட லாரன்ஸ், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, அவர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், இந்த கலவரம் மாணவர்கள் செய்ததல்ல என்றும், மாணவர்களின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கு கூடியிருந்தவர்களிடம் அதை தெரிவிக்க வந்தேன் சம்பந்தமே இல்லாத குழு ஒன்று சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பதாகவ்ம், இவர்கள் மாணவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேறு சில அமைப்புகள் இந்த போராட்டத்தை திசை திருப்புவதாக லாரன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
