Saturday, April 18
Shadow

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி சாய்மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் அது கூறியிருந்ததாவது,

கடந்த 2008ம் ஆண்டு மா்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டா்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.

அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அப்பணம் “மா்மயோகி” படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல் உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில் மா்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சோ்த்து ரூ.5.44 கோடியாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.