Monday, April 20
Shadow

அஜித்தின் ‘விசுவாசம்’ படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறதா?

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி நடந்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு பாடல்கள், சில காட்சிகள் ஆகியவற்றை சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்.

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் நடப்பதை விட, ஐதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. ‘விசுவாசம்’ படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சில அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்ட சமயத்தில் சிறப்பு அனுமதி வாங்கி நடைபெற்ற போது பலரும் அதை எதிர்த்தார்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் விஜய் அவருடைய படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே நடத்தச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் ஐதராபாத்திலும் வெளிநாட்டிலும் தான் நடைபெற உள்ளதாம். ஏற்கெனவே தடையை மீறி படப்பிடிப்பு நடத்திய விஜய் சேதுபதி மீது பல தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இப்போது அஜித்தும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். திரையுலகம் நடத்திய போராட்டத்திற்கு அஜித் ஏன் வரவில்லை என்பதன் காரணம் இப்போதுதான் புரிகிறது என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.