
அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 90 எம்.எல். தணிக்கையில் ’A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன
இந்தநிலையில் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக், ”பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சீரழிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளனர்.
கலாச்சார சீரழிவுக்கு காரணமான 90 எம்.எல் திரைப்படத்தை உடனே தடைசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மற்றும் இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து திரையிட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
