
சர்கார்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்பது அறிவிக்கப்படாத அறிந்த தகவல்தான். ‘2.0’, ‘பேட்ட’ ஆகிய படங்களை தொடர்ந்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அவருடைய ரசிகர்களிடையே இருந்தது.
இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், தான் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதை மட்டும் உறுதி செய்தார்.
அதுமட்டுமல்ல, இப்படம் ‘சர்கார்’ படம் மாதிரி அரசியல் கலந்த படமாக இருக்காது என்றும் ரஜினியிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் கலந்த படமாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த படத்தை யார் தயாரிக்கிறார் என்பது குறித்த எந்த தகவலையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவில்லை!
ரஜினி நடித்த ‘2.0’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ உட்பட பல படங்களை தயாரித்த ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்று முதலில் தகவல் வெளியானது. பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போதைய தகவல் என்ன தெரியுமா? முன்னணி ஹீரோவை வைத்து தற்போது படம் தயாரித்து வரும் பிரபல மூன்றெழுத்து பட நிறுவனம் தான் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக படத்துறையில் பேச்சு அடிபடுகிறது. அதேநேரம் இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. #rajinikanth #a.r.murugadoss #lycaprodution