
வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. ‘ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது. இயக்குநராக மட்டுமன்றி நாயகனாகவும் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘ஏற்கெனவே ஊகிக்கப்பட்டதுபோல், நான் இயக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதில் நான் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறேன்’
இதனை தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2018-ல் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
மேலும், தனுஷ் – கார்த்தி சுப்புராஜ் கூட்டணி படத்தை தயாரிக்கவிருந்தது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். தற்போது தனுஷ் இயக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருப்பதால், கார்த்திக் சுப்புராஜ் படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.
