Tuesday, February 11
Shadow

ரஜினிகாந்துக்கு நன்றி சொன்ன தனுஷ்

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். மும்பை, தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்களைப் பற்றியும், அவர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. நாளை மறுநாள் (ஜூன் 7) உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

‘காலா’ படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், “மக்களுக்கான படம் ‘காலா’. மக்களால் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம். தாராவியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார் பா.இரஞ்சித். தாராவியில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே இதில் பேசவில்லை. உலகம் முழுவதும் ஏதோ ஒருவகையில் ஒடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதனின் பிரச்சினையையும் இது பேசியுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை, ரஜினி சாரைவிட வேறு யாரால் சிறப்பாகப் பேசிவிட முடியும். சினிமாவில் நுழையும் பெரும்பாலான நடிகர்களுக்கு, அடுத்த ரஜினியாகிவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை இருக்கிறது. ஆனால், அடுத்த ரஜினியாவதற்கு இங்கு ஃபார்முலா எதுவுமே இல்லை. காரணம், எப்போதுமே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மட்டும்தான். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினி சாருக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், மிகக் கடினமாக உழைத்த என் படக்குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.